April 26, 2026

பிரெஞ்சு மொழி, சதுரங்கம், ரோபோட்டிக்ஸ் எல்லாம் ஒத்த காசு செலவு இல்லாம கத்துக்கலாம்…

ANNA LIBRARY (NALINI STORY). EXPRESS J. MANOHARAN

தமிழகத்தில் மாணவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள பொது நூலகங்களில் இலவச கோடை முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோடை கொண்டாட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முயற்சி, மாணவர்களின் அறிவுத் திறன், சிந்தனை திறன் மற்றும் சமூகத் திறன்களை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த முகாம்கள் பொதுவாக 8 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களை இலக்காகக் கொண்டு ஒரு மாத காலம் நடைபெறவுள்ளன. கலைப் பயிற்சிகள், சிந்தனை வளர்க்கும் விளையாட்டுகள், கதை சொல்லல், வாசிப்பு செயல்பாடுகள், புதிர் போட்டிகள் மற்றும் மொழித் திறன் மேம்பாட்டு வகுப்புகள் இதில் இடம்பெறும். தினமும் காலை மற்றும் பிற்பகல் அமர்வுகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள், மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், குழுவாகச் செயல்படவும் ஒரு பயனுள்ள தளமாக இருக்கும்

இந்த திட்டத்தை பொது நூலக இயக்குநரகம் மற்றும் உள்ளூர் வாசகர் வட்டங்கள் இணைந்து செயல்படுத்துகின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் அருகிலுள்ள நூலகங்களில் நேரடியாக பதிவு செய்து இலவசமாக கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாம்கள் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே மேற்கொள்ள நூலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்த முயற்சியில் முன்னணி பங்கு வகிக்கிறது. இங்கு 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி, சதுரங்கம், ரோபோட்டிக்ஸ் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மே 1 முதல் மே 31 வரை நடத்தப்படுகின்றன. “மாணவர்கள் புத்தக அறிவைத் தாண்டி புதிய திறன்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த முகாம்கள் அமையும்,” என்று நூலகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால், முழுமையான கால அட்டவணை தேர்தல் செயல்முறைகள் முடிந்த பின் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறவுள்ள இந்த முகாம்கள், மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தையும் அறிவு திறன்களையும் மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகின்றன.