பாஜகவின் போலி அரசியலைத் தமிழக விவசாயிகள் புரிந்துகொண்டுள்ளனர்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!

சென்னை: கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என அம்மாநில பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக பாஜகவின் இரட்டை வேடத்தை மாநில விவசாயிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கர்நாடக பாஜகவின் போராட்டம்:

“கர்நாடகாவில் ‘தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது’ என்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட அம்மாநில பாஜக தலைவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பார்க்கத் தவறிவிட்டாரா?

காவிரி நீர் உரிமையில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடும் எடியூரப்பாவையும், கர்நாடக பாஜக அமைப்பையும் எதிர்த்துக் கேள்வி கேட்க நயினார் நாகேந்திரனுக்கு தைரியம் இருக்கிறதா?”

பாஜகவின் இரட்டை வேடம்:

“தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமையைப் பெற்றுத்தரப் பிரதமர் மோடியிடமோ அல்லது மத்திய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது தமிழக பாஜக பேசினதா?

  • கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடுவது,
  • டெல்லியில் மோடி அரசு மூலம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளைப் பறிப்பது,
  • தமிழ்நாட்டிற்கு வந்து காங்கிரஸ் கட்சி மீது பழியைப் போடுவது,
  • இதுவே பாஜகவின் அப்பட்டமான இரட்டை வேட அரசியலாகும்.”

பாஜகவின் இந்த பொய்யான நாடகத்தையும் போலி அரசியலையும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்று மாணிக்கம் தாகூர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

You may have missed