தவெக எம்எல்ஏ லட்சுமணனை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் சுயேட்சை வேட்பாளர் மனு..

ஊழல் வழக்கை மறைத்து சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் சுயேட்சை வேட்பாளர் மனு அளித்துள்ளார். சேலம் மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் எஸ்.லக்ஷ்மணன் தனது வேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரத்தில் முக்கிய தகவல்களை மறைத்துள்ளதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் சுயேட்சை வேட்பாளர் சி.மனோகர் மனு அளித்துள்ளார்.

அவரது மனுவில், தவெக வேட்பாளர் லட்சுமணன் தன்மீது நிலுவையில் இருந்த ஊழல் மற்றும் ‘கட்டப்பஞ்சாயத்து’ தொடர்பான துறை ரீதியான நடவடிக்கைகளை வேட்பு மனுவில் முழுமையாக தெரிவிக்கவில்லை. அவருக்கு எதிரான விசாரணையில் “நிரூபிக்கப்படவில்லை” என்ற அறிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்காமல் அவர் ஊழல் செய்திருக்கிறார் என்று கருத்துகளைப் பதிவுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபோன்ற சூழலில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அவர் தகுதி இழந்தவராக அறிவிக்கப்பட வேண்டும்.இதுகுறித்து ஆளுநர் உரிய விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.