சென்னை, போரூர்- பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் யோகானந்த் (43). இவருக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகமான சில நபர்கள், ஒரு மொபைல் செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், முதலீட்டு தொகையைவிட 3 மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய யோகானந்த், அவர்கள் அனுப்பிய 13 வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.1,73,48,330-ஐ செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நாட்கள் முடிந்தும் யோகானந்த்துக்கு 3 மடங்கு லாபம் மற்றும் முதலீட்டு தொகை திரும்ப கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதையடுத்து, அவர் ஆவடி இணையவழி குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோயம்புத்தூர், கவுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (35), போலி நிறுவனம் ஆரம்பித்து, அதன் பெயரில் பல ஊர்களில் உள்ள பல்வேறு வங்கி கிளைகளில் கணக்குகளை தொடங்கி, அவற்றை இணையவழி மோசடி கும்பலுக்கு விற்பனை செய்து, கமிஷன் தொகையை பெற்றதும், அந்த வங்கி கணக்குகளுக்கு யோகானந்த்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அன்பழகனை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும், பொதுமக்கள் இணைய தளங்களில் வரும் போலி விளம்பரங்களை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!