April 26, 2026

எம்பிக்களின் வீட்டு சுவர்களில் துரோகி என எழுதி போராட்டம்:

ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்த எம்பிக்கள் ஹர்பஜன்சிங், அசோக் மிட்டல், ராஜேந்திரகுப்தா வீடுகளுக்கு முன்பு ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். வீட்டு சுவர்களில் துரோகி என எழுதியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சதா தலைமையில் 7 எம்பிக்கள் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகவ் சதா, சந்தீப் பதக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம்ஜித் சிங் சாஹ்னி, சுவாதி மாலிவால், அசோக் மிட்டல் ஆகியோர் முறைப்படி பாஜவில் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 7 எம்பிக்களுக்கு எதிராக ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் இல்லத்தின் வெளிச் சுவர்களிலும், பிரதான வாயிலிலும் போராட்டக்காரர்கள் ‘கத்தார்’ (துரோகி) என்ற சொல்லை எழுதினர். மேலும் அவரது வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதே போல் லூதியானாவில் உள்ள எம்பி அசோக் மிட்டல் வீட்டிற்கு வெளியேயும் துரோகி என்ற எழுத்தை எழுதி ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் அசோக் மிட்டலுக்குச் சொந்தமான லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தின் பக்வாரா வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியேயும், போராட்டக்காரர்கள் துரோகி என்ற வார்த்தையை கருப்பு ஸ்ப்ரே பெயிண்ட் மூலம் எழுதினர். மேலும், எல்.பி.யு வளாகத்திற்கு வெளியே இருந்த மிட்டலின் சுவரொட்டியைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதோடு, பஞ்சாப் மக்களுக்குத் துரோகம் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டி, அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அதே போல் மற்ற அனைத்து எம்பிக்களுக்கும் எதிராகவும் ஆம்ஆத்மி தொண்டர்கள் பஞ்சாப் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள்.