முந்தைய திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் பணத்தை தவெக அரசு, ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக மகளிருக்கான உரிமைத் தொகை எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம், மகளிருக்கு மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து சேவை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், முதல் கையெழுத்து மகளிருக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
கடந்த அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என விஜய் உறுதி அளித்தார். மேலும், மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவை என்றும் கூறினார். அதே நேரம் மே மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என உத்தரவிட்டார். அதன்படி, மே மாதத்திற்கான உரிமைத்தொகை ரூ.1000 இன்று வரவு வைக்கப்பட்டது.
இருப்பினும் விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் மாதம் 2500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் என கூறி இருந்த நிலையில், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!