போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை…

தூத்துக்குடி 3-ஆம் மைல் பைபாஸ் ரோடு அருகே வட மாநில வாலிபர்  அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு 3-ஆம் மைல் புதிய துறைமுகம் பைபாஸ் ரோடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளி ராஜேஷ் குமார் சிங் (40) என்பவரை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்த வழக்கில், தொடர்புடைய 4 குற்றவாளிகளையும் தென்பாகம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், பொல்பெல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிர்ஜா சிங் மகன் ராஜேஷ் குமார் சிங் (40). இவர் தூத்துக்குடியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இரவு வேலை முடிந்ததும், ராஜேஷ் குமார் சிங் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் ஐந்து பேரும் தூத்துக்குடி மதுரை புதிய துறைமுகம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு மதுபானக் கடையில் மது வாங்கியுள்ளனர். 

பின்னர், அங்கிருந்து அருகில் உள்ள ஆள்நடமாட்டமில்லாத முள்செடிகளுக்கு நடுவே அமர்ந்து அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். மது அருந்திக் கொண்டிருந்த போது, தங்களுக்குள் மதுபானத்தைக் குறைவாகப் பகிர்ந்து கொடுத்ததாகக் கூறி அவர்களுக்குள் திடீரென வாய்வார்த்தை முற்றியுள்ளது. இதில் ஏற்பட்ட கடுமையான தகராறில் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து, அருகில் கிடந்த கனமான மரக்கட்டைகளை எடுத்து ராஜேஷ் குமார் சிங்கின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் குமார் சிங் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜேஷ் குமார் சிங்கின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை வழக்கில் தூத்துக்குடி ராஜ் வள்ளினாயகபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த சிவபாலமுருகன் (23), ராஜகோபால் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜேம்ஸ் (25), தேவகி நகர் ராஜீவ் நகர் பாலம் அருகில் வசிக்கும் கோவிந்தராஜ் மகன் பூமி (24) மற்றும் பாளையங்கோட்டை ரோடு 3-ஆம் மைல் 3-வது தெருவைச் சேர்ந்த ஜபருதீன் மகன் இமாம் காசாலி (26) ஆகிய 4 பேரையும் தென்பாகம் போலீசார் கைது செய்து செய்துள்ளனர்.