September 10, 2026

மதுரையில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை …

மதுரை மாவட்டம் அவனியாபுரம், எம்.எம்.சி. காலனி, இரண்டாவது பிளாக் பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி (வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆறுமுக நகரில் வசித்து வரும் ராஜா உசேன் (வயது 33), பாலாஜியின் நண்பர் ஆவார்.

இப்பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் 20 நாட்களுக்கு முன்பு திருவிழா நடந்து இருக்கிறது. அப்போது, பாலாஜிக்கும் – அதே பகுதியில் வசித்து வரும் சஞ்சய் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது முன்விரோதத்தை ஏற்படுத்திய நிலையில், சஞ்சய் உட்பட 5 பேர் கும்பல் பாலாஜியை தேடி இருக்கிறது.

மதிய வேளையில் பாலாஜி, ராஜா உசேன் ஆகியோர் அங்கிருக்கும் தண்ணீர் தொட்டி அருகில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் அவைகளை சரமாரியாக வெட்டியது. பாலாஜியை ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ராஜா உசேன் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் துடித்தார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ராஜா உசேனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஐவர் கும்பலுக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

You may have missed