September 10, 2026

தர்மபுரி :கழுத்து அறுக்கப்பட்ட காதலி: பொதுமக்கள் தர்ம அடியால் ஜி.ஹெச்.ல் காதலனுக்கு சிகிச்சை…

தர்மபுரியில் திருமணம் செய்ய மறுத்ததால் காதலனால் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியது. பொதுமக்கள் தர்ம அடியால் தர்மபுரி அரசு மருத்துவனையில் காதலன் சேர்க்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அதியமான்கேட்டை அருகே தேங்காய்மரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் கடைசி மகள் ஷீலா (22) தர்மபுரியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.

அதே ஊரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சின்னசாமி (31), தர்மபுரி தொழில் மையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஷீலாவை திருமணம் செய்ய விரும்பி அவரது வீட்டிற்கு சென்று சின்னசாமி பெண் கேட்டுள்ளார். ஆனால், ஷீலாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஷீலா பேச்சை குறைத்து கொண்டார். இதனால் சின்னசாமி ஆத்திரத்தில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை நகைக்கடையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்டிற்கு வந்த ஷீலா, பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சின்னசாமி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷீலாவின் கழுத்தை அறுத்தார். ஆத்திரம் தீராமல் வயிற்றில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள் சுற்றிவளைத்து சின்னசாமியை பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து, தர்மபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். காயத்துடன் உயிருக்கு போராடிய ஷீலா, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னசாமியை கைது செய்தனர்

You may have missed