May 2, 2026

கரூர் அருகே காருக்குள் விளையாடிய சிறுவன் மூச்சுதிணறி பலி…

கரூர், தோகைமலை அடுத்த கழுகூர் ஈஸ்வரன்கோயில் தெருவை சேர்ந்தவர் ஆண்டிவேல் (34). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். கூலித்தொழிலாளி. தம்பதிக்கு கிரீஷ்வர் (6), சஞ்சீவ்(3) என்ற 2 மகன்கள். 8 மணியளவில் வீட்டின் வெளியே இருவரும் விளையாடி கொண்டிருந்தனர். இதில் சஞ்சீவ் மட்டும் திடீர் என காணவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த தம்பதியினர், சஞ்சீவை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை.

இதில் சந்தேகத்தில் வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த தங்களுக்கு சொந்தமான கார் மீது மூடப்பட்டிருந்த கவரை எடுத்து பார்த்த போது காருக்குள்ளே சஞ்சீவ் மூச்சு திணறி மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள், சிறுவனை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சஞ்சீவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், வீட்டு முன் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது கவர் போடாமல் இருந்துள்ளது.

இதனால் சஞ்சீவ், கார் கதவை திறந்து காருக்குள்ளே தினமும் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளான். வெயில் அதிகமாக இருந்ததால் கார் மீது கவர் போடப்பட்டு மூடப்பட்டு இருந்துள்ளது. வழக்கம் போல் விளையாட சென்ற சஞ்சீவ், கார் மீது போடப்பட்டு இருந்த கவரை அகற்றி காரின் கதவை திறந்து உள்ளே சென்றதோடு கதவு பட்டனை எதிர்பாராத விதமாக அழுத்தியதால் கதவு மூடி உள்ளது. கார் மீது கவர் மூடப்பட்டு இருந்ததால் காருக்குள்ளே இருந்த சஞ்சீவ் வெளியே தெரியாமலும், வெளியே இருப்பவர்கள் சஞ்சீவ்க்கு தெரியாமல் போனது. காருக்குள்ளே நீண்ட நேரமாக இருந்ததால் மூச்சுத்தினறி இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.