திருமணம் செய்து கொள்வதாக கூறி லண்டன் இன்ஜினியரிடம் ரூ.9.35 கோடி மோசடி செய்த நடிகை அஷூ ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலீசில் 60 வயது முதியவர் ஒரு புகார் அளித்தார். அதில் லண்டனில் மென்பொருள் பொறியாளர் பணி செய்யும் எனது மகனை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, நடிகை அஷூ ரெட்டியும் அவரது குடும்பத்தினரும் ரூ. 9.35 கோடி மோசடி செய்துவிட்டனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில், எனது மகன் இந்தியா வந்த போது, பொதுவான நண்பர்கள் மூலம் நடிகை அஷூ ரெட்டியைச் சந்தித்தார். அப்போது தான் ஒரு நடிகை என்றும், அமெரிக்காவில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளதாகவும் அவர் எனது மகனிடம் கூறியுள்ளார். அவரைச் சந்தித்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே, அதாவது மார்ச் 2018ல், அவரைத் திருமணம் செய்துகொள்வதாக அந்த நடிகை எனது மகனிடம் தெரிவித்தார். எனது மகனின் முந்தைய விவாகரத்து விவகாரம் ஒரு பொருட்டல்ல என்றும், அது தங்களுக்குத் தடையாக இருக்காது என்றும் கூறிய அஷூ ரெட்டி உறவைத் தொடர்ந்துள்ளார்.
2020 முதல் 2025 வரை, நடிகை அஷூ ரெட்டி பெரும் தொகையை என் மகனிடம் இருந்து வாங்கி உள்ளார். தொடர்ந்து வற்புறுத்தியதால், நடிகைக்கு சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் தங்க நகைகளை ஆகியவற்றை என் மகன் வாங்கித்தந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி பலமுறை ஏமாற்றிய நடிகை கடந்த 2025ல் பொய் வழக்குகள் போடுவதாக மிரட்டி பேசுவதையும் நிறுத்தியும் விட்டார். திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்ததால் எனது மகன் ரூ.9.35 நிதி இழப்பையும் மன அழுத்தத்தையும் சந்தித்து வருகிறார். எனவே நடிகை அஷூ ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் நடிகை அஷூ ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

More Stories
வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ பதிவிட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
தபால்நிலையத்தில் சேமிப்பு கணக்கில் முறைகேடு: பொறுப்பு அதிகாரி சஸ்பெண்ட்..
மதுரை மாவட்டத்தில் ரூ.70 லட்சத்தில் வனப்பகுதியை பாதுகாக்க கம்பிவேலி அமைக்கும் பணி…