தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்எல்ஏ, தலைமை நிலையச் செயலாளர், அன்பழகன் மற்றும் மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும். இதற்காக அடுத்த மாதம் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள தலைவாசலில் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசைக் கண்டித்து டிசம்பர் 12-ம் தேதி மாநில முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.


