September 9, 2026

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று சட்டசபையில் தனித் தீர்மானம்: முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!

சென்னை: மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை (Delimitation) நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (ஆகஸ்ட் 12) முதல்வர் விஜய் அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து முன்மொழிகிறார்.

மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படியே நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொகுதி மறுவரையறைக்காக மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டத் திருத்தத்தின் மூலம், மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்தச் சிறப்புத் தீர்மானம் பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

தீர்மானத்தின் முக்கியக் கோரிக்கைகள்:

  1. 543 இடங்கள் நிரந்தரம்: நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 என்ற அளவிலேயே தொடர்ந்து நிரந்தரமாகத் தக்கவைக்க வேண்டும்.
  2. மாநிலங்களுக்கான விகிதாச்சாரம்: மாநிலங்களுக்கு இடையேயான மக்களவை இடங்களின் பகிர்வு மற்றும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை தற்போதைய நிலையிலேயே மாற்றமின்றித் தொடர வேண்டும்.
  3. மகளிர் இடஒதுக்கீடு: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை எவ்வித காலதாமதமும் இன்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே வரும் 2029 மக்களவைப் பொதுத்தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி, பொருளாதாரத்திலும் சமூக நலனிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது மத்திய அரசின் கடமை என்பதை வலியுறுத்தி, இந்தத் தீர்மானங்கள் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட உள்ளன.

You may have missed