May 3, 2026

பொள்ளாச்சியில் தோட்டத்தில் கைவிரல்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, காளியாபுரம் பகுதியில் உடுமலையைச் சேர்ந்த பிரமிளா என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் தங்கி வேலை செய்வதற்காக, சந்திரன் மற்றும் அவரது மனைவி காளீஸ்வரி ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆழியார் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவருடன் சந்திரனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கருப்புசாமி தனக்குத் தெரிந்த வேலை இருந்தால் சொல்லுமாறு சந்திரனிடம் கேட்டுள்ளார். இதற்காகச் சந்திரன் தனது மனைவி காளீஸ்வரியின் செல்போன் எண்ணைக் கொடுத்து, வேலை இருந்தால் தகவல் சொல்வதாகக் கூறியுள்ளார். சந்திரன் மற்றும் கருப்புசாமி இருவரும் வேலை முடிந்தவுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்

நட்பு ரீதியாகப் பழகி வந்த கருப்புசாமிக்கு, சந்திரனின் மனைவி காளீஸ்வரி மீது தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி காளீஸ்வரியின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டு ஆபாசமாகவும், தவறான உள்நோக்கத்துடனும் பேசி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காளீஸ்வரி, இந்த விவகாரம் குறித்துத் தனது கணவர் சந்திரனிடம் கூறி அழுதுள்ளார்.

தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனுக்குப் பாடம் புகட்ட நினைத்த சந்திரன், கடந்த 25-ஆம் தேதி கருப்புசாமியைத் தோட்டத்திற்கு வருமாறு போனில் அழைத்துள்ளார். அங்கு வந்த கருப்புசாமிக்குச் சந்திரன் மது வாங்கிக் கொடுத்துள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தபோது, “ஏன் என் மனைவியிடம் தவறாகப் பேசினாய்?” என்று சந்திரன் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சந்திரன், அருகில் கிடந்த மண்வெட்டியின் கைப்பிடியை எடுத்து கருப்புசாமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி விழுந்த கருப்புசாமியை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலை செய்ததை மறைக்கத் திட்டமிட்ட தம்பதி, கருப்புசாமியின் உடலைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளனர். ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு உடல் அழுகத் தொடங்கியதால் அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காளியாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் அளித்தனர். சிக்கிய கைவிரல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் சோதனை செய்தபோது, மண்ணுக்குள் இருந்து ஒரு கைவிரல் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஆனைமலை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனைமலை துணை கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையில் வந்த போலீசார், உடலைத் தோண்டி எடுத்து அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் இந்தத் கொலை தொடர்பாகச் சந்திரன் மற்றும் காளீஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நபரை கணவனே அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் ஆனைமலை பகுதியில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.