September 9, 2026

80-ஆவது சுதந்திர தினம்: தேசியக் கொடிக்கு துதிக்கை உயர்த்தி வீர வணக்கம் செலுத்திய கும்பகோணம் கோவில் யானை!

கும்பகோணம்:

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை ‘மங்களம்’, தேசியக் கொடிக்கு துதிக்கை உயர்த்தி வீர வணக்கம் செலுத்திய நிகழ்வு பொதுமக்களையும் பக்தர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில் ‘மங்களம்’ என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சிறந்த கோவில் யானைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற பெருமைக்குரிய இந்த யானை, சுதந்திர தின விழாவையொட்டி தேசபக்தி வண்ணங்களால் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டது.

யானையின் உடல் மீது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு, நெற்றியில் அசோக சக்கரத் திலகம் தீட்டப்பட்டு, மூவர்ண மலர் மாலை அணிவிக்கப்பட்டு கம்பீரமாகத் தயார் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பாகன்களின் வழிகாட்டுதலுடன் கோவில் பிரகாரத்தில் மங்களம் யானை கம்பீர நடைபோட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர், கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடிக் கம்பத்தின் முன்பாக நின்ற அந்த யானை, தனது துதிக்கையை உயர்த்தி கம்பீரமாக வீர வணக்கம் செலுத்தியது.

யானையின் இந்தத் தேசபக்தி மரியாதையைக் கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியமும் பரவசமும் அடைந்து, இந்நிகழ்வைத் தங்களது செல்போன்களில் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்து மகிழ்ந்தனர்.

You may have missed