செந்தில் பாலாஜியை யாரும் சந்தேகிக்க கூடாதா?- நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி!

திமுகவையும், செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேதிக்கக்கூடாதா என்று அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த துயரச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட், பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் சகாயம், மாங்காட்டை சேர்ந்த தவெக உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடி தவெக உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதற்கு அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளப்பக்கத்தில்,” பேரணியின் போது செருப்புகள் மற்றும் கற்களை வீசியவர்களை அடையாளம் காண திமுக தவறியது. தவெக தொண்டர்களை கத்தியால் தாக்கியவர்களைக் கண்டறியது தவறியது. பொதுமக்களிடையே தள்ளு முள்ளு ஏற்படுத்தியவர்களை அடையாளம் காணவும் தவறியது திமுக. 40 உயிர்களைப் பறிகொடுத்த நிகழ்வில் இதற்குக் காரணமானவர்களைப் பற்றி கவலை இல்லை.

ஆனால், பேச்சு சுதந்திரம் சார்ந்த கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் மற்றும் யூடியூப்பரான ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவையும், செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேதிக்கக்கூடாதா? திமுகவை எதிர்த்து யாரும் பேசக்கூடாதா? பேசினால் திமுக அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கி மிரட்டல் விடுக்கிறது. திமுக போலியான தகவல்களைப் பரப்பவில்லையா? அவர்கள் போலியான கதைகளை அமைக்கவில்லையா? இது அர்களின் நடத்தை மற்றும் ஆட்சி திறனை வெளிப்படையாகக் காட்டுகிறது. அவர்கள் எந்த உச்சநிலைக்கும் செல்வார்கள் என்பது நமக்கு தெரிவது தான். தவறுக்கு மேல் தவறு திமுக. அவர்கள் தோல்வியடைகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.