“எனது முதல்வர் பதவியை நான்தான் எடப்பாடி பழனிசாமி கொடுத்தேன் என்றும், திமுக வாய்ப்பளித்தால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன்” என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேனி வடக்கு மாவட்டச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பரப்புரை ஆற்றினார்.

எடப்பாடி பழனிசாமியின் நாடகம்

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “எடப்பாடி பழனிசாமி ஒரு ஆளுமைமிக்க தலைவராக இல்லை.  கடந்த 10 தேர்தல்களில் அவர் தோல்வியைத் தழுவினார்.  எடப்பாடி பழனிசாமி 210 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது ஒரு நாடகம்.” என்று விமர்சித்தார்.

 

திமுக தலைமையிலான கூட்டணி வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெறும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.08% ஆக உயர்ந்துள்ளது.

திமுக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் இல்லாத பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.” என்று ஓ.பி.எஸ் பெருமிதம் தெரிவித்தார்.

 முதல்வர் பதவியை கொடுத்தேன்

கடந்த நான்கு ஆண்டுகாலமாக எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்த போது சொல்ல முடியாத அளவுக்குக் கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்தேன்.  முரண்டு பிடிக்காமல் எனது முதல்வர் பதவியை கொடுத்தேன். ஆனால் அவர் என்ன செய்தார். என்று ஓ. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

போடி தொகுதியில்…,

தென்மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும். முதல்வர் உத்தரவிட்டால் போடி தொகுதியில் தான் தேர்தலில் போட்டியிடத் தயார்” என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.