September 10, 2026

கோவையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 60 வயது யோகா ஆசிரியர் கைது: 

கோவை அருகே வீட்டில் சாப்பிட வந்த இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்து பலாத்காரம் செய்ய முயன்ற 60 வயது யோகா ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது விராலியூர். இங்குள்ள வாடகை வீட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த அருணன் (60) தனது மனைவி பிரியாவுடன் வசித்து வருகிறார். இன்சூரன்ஸ் ஏஜெண்டான அருணன், யோகா ஆசிரியராகவும் உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் தேனியை சேர்ந்த 22 வயது இளம்பெண் தனது தோழிகள் 5 பேருடன் வசித்து வருகிறார். இளம்பெண்கள் தனியார் நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்து வருகிறார்கள்.

6 இளம் பெண்களுக்கும் அருணன் வீட்டில் மாத மாதம் பணம் செலுத்தி சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில், 5 இளம்பெண்கள் வேலைக்கு சென்றிருந்த நிலையில் 22 வயது இளம்பெண் மட்டும் அருணன் வீட்டில் காலை சாப்பிட வந்தார். அருணனின் மனைவி பிரியா உடல் நலம் சரியில்லாமல் தனி அறையில் ஓய்வெடுத்தார். இளம்பெண் சாப்பிட்ட பின்னர் பிளேட்டை சுத்தம் செய்ய முயன்றார். அப்போது, திடீரென அருணன் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பலாத்காரம் செய்ய முயன்றார்

இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அருணனுக்கு தர்ம அடி கொடுத்து இளம்பெண்ணை போராடி மீட்டனர். இதனால், இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆலாந்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

You may have missed