ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த நபர்…

சென்னையில் உள்ள அண்ணா நகர், கிழக்கு சத்யா நகரில் வசித்து வருபவர் சாந்தி (வயது 54). இவர் புடவை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சாந்தியின் கணவர் ஏகாம்பரம் தற்கொலை செய்துகொண்டார். இதனால் சாந்தி தற்போது தனியாக வசித்து வருகிறார்.

இதனிடையே, சாந்திக்கு அபபகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் (வயது 65) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, 2016ம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். சாந்தி புடவை வியாபாரத்துக்காக பலரிடமும் கடன் வாங்கி இருக்கிறார்.

இதனை திருப்ப செலுத்தாமல் ஏமாற்றி வந்த நிலையில், சாந்தியின் நடத்தையிலும் ராஜேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து இருவருக்கும் இடையே தகராறு உண்டாகி இருக்கிறது. சம்பவத்தன்று இரவில் ராஜேந்திரன் போதையில் வீட்டுக்கு வந்த நிலையில், தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் உருவாகி இருக்கிறது.

அப்போது, இருவரும் ஒருவரையொருவர் தாக்கி இருக்கின்றனர். பின் இருவரும் உறங்கி இருக்கின்றனர். அதிகாலை நேரத்தில் எழுந்த ராஜேந்திரன், ஆத்திரம் தீராமல் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து சாந்தியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சாந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.

விசாரணைக்குபின் நேரில் சென்ற அதிகாரிகள் சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.