September 9, 2026

தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் தாக்கல்

சென்னை:

மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் தமிழகத்திற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வை வழங்க வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

இத்தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் முன்மொழிய உள்ளார்.

தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

  • சமமான நிதிப் பகிர்வு: மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்ற நியாயமான மற்றும் வெளிப்படையான நிதிப் பகிர்வு முறை அவசியமாகும்.
  • பொருளாதாரப் பங்களிப்பு: தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி மற்றும் சிறந்த நிதி மேலாண்மை மூலம் தேசிய பொருளாதாரத்திற்குத் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
  • செயல்திறனுக்கான அங்கீகாரம்: மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள், வரிப்பகிர்வு அளவுகோல்களால் எந்தவிதத்திலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்படக் கூடாது.
  • கொள்கை அடிப்படை: மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்:

சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதிக்க உள்ளனர். விவாதத்திற்குப் பிறகு தீர்மானம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பின் மத்திய அரசின் கவனத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட உள்ளது.

You may have missed