கோவை மாவட்டம் சௌரிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உறவினர்களால் அவரது உடலை சௌரிபாளையம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். அப்போது நாகராஜ் மிகுந்த விருப்பத்துடன் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க நகையை அவரது உடலிலேயே அணிவித்துப் புதைத்துள்ளனர். பின்னர் 16 வது நாள் காரியம் முடிந்த பின்னர் கல்லறை கட்டிக் கொள்ளலாம் என குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் 16 வது நாள் காரியத்துக்கு உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய வந்தபோது சடலம் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு இருப்பது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மயானத்தில் வேலை பார்க்கும் கார்த்திக் என்பவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது எதையோ விழுங்கி விழுங்கி பேசி மழுப்பப் பார்த்த கார்த்திக் அண்ணே மயான வேலை இருப்பதாக வரட்டா எனக்கூறி நழுவியுள்ளார்.
அதில் சந்தேகம் அடைந்த இறந்தவரின் மகன், பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணையைத் தொடங்கிய போலீசார் மயான தொழிலாளி கார்த்திகேயனை பிடித்துச் சிறப்பாகக் கவனித்துள்ளார். ஒருகட்டத்தில் “சார் சார் நாங்க தான் சார் எடுத்தோம் செத்த உடம்புல எதுக்கு நகைன்னு தோண்டி எடுத்து பங்கு போட்டுக்குடோம்” என வாக்குமூலம் கொடுத்துள்ளார். கையோடு தனது கூட்டாளிகளான மணி, ரஞ்சித் ஆகிய இருவரையும் கோர்த்து விட்டுள்ளார்.

More Stories
போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் பலி…
எம்எல்ஏ பல்லவியின் குழந்தைக்கு ‘தமிழ் வெற்றிகொண்டான்’ என பெயர் சூட்டிய முதல்வர் விஜய்…
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் சிங்கப்பெண் போலீசாரிடம் ஒப்படைத்தனர்…