September 10, 2026

போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் பலி…

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பயிற்சி மையக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் திங்கட்கிழமை (22) செய்தி வெளியிட்டுள்ளன.தீ விபத்து ஏற்பட்டபோது, ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர். மேலும், தப்பிப்பதற்காக சில மாணவர்கள் கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு குதித்ததில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தீயைக் கட்டுப்படுத்திய பின்னர், இடிபாடுகளுக்கு மத்தியில் 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு வணிகப் பகுதியில் அமைந்துள்ள இந்த மூன்று மாடிக் கட்டிடத்தில், பயிற்சி மையம் மட்டுமின்றி, ஒரு விளையாட்டு மையம், செல்லப்பிராணிகளுக்கான உபகரணக் கடை மற்றும் ஒரு விலங்கு மருத்துவமனை உள்ளிட்ட பல கடைகளும் இயங்கி வந்தன.

இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

You may have missed