ஜியோவில் இருந்து ஏர்டெல்லுக்கு மாற்ற அனுமதிக்காததால் பெற்றோரை படுகொலை செய்த பெங்களுரு பொறியாளர்?

ஓய்வு பெற்ற கடற்படை கேப்டனான தந்தை மற்றும் பல் மருத்துவரான தாய் ஆகிய இருவரையும், அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி சொந்த ஊருக்கு திரும்பிய மகன், கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்த சம்பவம் பெங்களூரு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏர்டெல்லில் இருந்து ஜியோவுக்கு சிம்மை மாற்றுவதற்கு தந்தை அனுமதிக்காததால் பெற்றோரை மகன் கொலை செய்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படை கேப்டன் – பல் மருத்துவர் தம்பதிபெங்களூரு எச்.ஏ.எல் டவுன்ஷிப் அருகே உள்ள விஞ்ஞான் நகரில் ஓய்வு பெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திரபட் (வயது 60), பல் மருத்துவரான அவரது மனைவி சியாமளா பட் (வயது 55) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களின் மகன் ரோகன் சந்திரபட் (வயது 33) அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றி விட்டு 3 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரோகன் பட் தனது வீட்டில் இருந்த தாய் – தந்தையை கத்தியால் சரமாரியாக வெட்டினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்து வீட்டினர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ரோகனை கைது செய்து விசாரித்தனர்

நவீன் சந்திரபட் மற்றும் அவரது மனைவி சியாமளா ஆகியோரிடம் பெங்களூருவில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதற்காக பணம் கேட்டு, அதை தராமல் உதாசீனப்படுத்தியதால் ஆத்திரத்தில் இருந்த ரோகன் அடிக்கடி அவர்களுடன் சண்டையிட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றி கொலை செய்ததாக தெரிய வந்தது. எனினும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாதவி நாயர் என்பவர், கொல்லப்பட்ட ஷியாமளா தனது மகனுக்கு மனச்சிதைவு மற்றும் மன அழுத்தம் இருந்ததாக தெரிவித்ததாக கூறினார்.

இதனை அடுத்து போலீசார் பெங்களூரு நிமன்ஸ் மருத்துவமனையில் ரோகனை அனுமதித்தனர். ஒரு வாரம் சிகிச்சை பெற்ற நிலையில் ரோகனுக்கு மனச்சிதைவு உள்ளிட்ட எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என போலீசாரிடம் மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். இதனையடுத்து ரோகனிடம் வழக்கமான முறையில் விசாரணை நடந்ததாக வொயிட்பீல்ட் துணைக் காவல் ஆணையர் தெரிவித்தார்.

இதுகுறித்து துணை காவல் ஆணையர் சைதலு அதாவத் கூறுகையில், ‘ரோகன் தனது பெற்றோரை கொலை செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அந்த வகையில் வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பிய ரோகன், பெங்களூரில் சொந்தமாக ஏஐ தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் அமைப்பதற்காக 10 லட்ச ரூபாயை தந்தையிடம் கேட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்தார்.