சைலெண்டாக டிசிஎஸ் 50000 ஊழியர்களுக்கு டார்கெட்…

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் ஒரு மாபெரும் ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

‘க்ளாட்’ (Claude AI) தளத்தை உருவாக்கிய அமெரிக்காவின் முன்னணி ஏஐ நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) உடன் டிசிஎஸ் நிறுவனம் ஒரு உலகளாவிய கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. எதற்காக இந்த ஒப்பந்தம்? இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்திற்கும், டிசிஎஸ் ஊழியர்களுக்கும் கிடைக்கப்போவது என்ன?

இந்த ஒரு ஒப்பந்தம் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ வர்த்தக பயணம் வேகமாக செல்ல உள்ளது. க்ளாட் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தம் மூலம் உலகெங்கிலும் உள்ள தனது வாடிக்கையாளர்கள் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சேவையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் மிக எளிதாகப் பயன்படுத்த வழிவகை செய்யவுள்ளது.

இதுக்குறித்து டிசிஎஸ் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில், இந்த புதிய கூட்டு முயற்சியின் கீழ் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அதிநவீன க்ளாட் மாடல்களைப் பயன்படுத்திப் புதிய தொழில்முறை தீர்வுகளை உருவாக்க டிசிஎஸ் ஒரு தனி வணிகப் பிரிவையே (Dedicated Business Unit) தொடங்கவுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த கூட்டாண்மையின் ஒரு மிக முக்கியப் பகுதியாக, டிசிஎஸ் நிறுவனம் தனது சொந்த டெக் சேவை உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பொறியியல், நிதி, சட்டம், சந்தைப்படுத்தல் (Marketing) மற்றும் விற்பனைப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 50,000 ஊழியர்களுக்குக் க்ளாட் ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் நேரடி அனுமதியை வழங்கவுள்ளது.

இதன் மூலம் டிசிஎஸ் ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் நேரடி அனுபவத்தைப் பெறுவதுடன், தங்களின் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன ஏஐ அடிப்படையிலான டிரான்ஸ்பார்மேஷன் திட்டங்களை மிகச் சிறப்பாக வடிவமைத்துக் கொடுக்க முடியும். ஏஐ திட்டங்களை வெறும் சோதனை கட்டத்தோடு நிறுத்திவிடாமல், அவற்றை முழுமையான வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்காகும். டிசிஎஸ் ஐஓஎன் (TCS iON) அதிரடி! டிசிஎஸ் நிறுவனத்தின் உலகப் புகழ்பெற்ற கல்வி மற்றும் தேர்வுத் தளமான ‘டிசிஎஸ் ஐஓஎன்’ (TCS iON) இனி க்ளாட் ஏஐ மாடல்கள் குறித்த பிரத்யேகப் பயிற்சி மற்றும் சான்றிதழ் படிப்புகளை (Learning and Certification Programmes) மாணவர்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் வழங்கவுள்ளது. இதன் மூலம் ஏஐ தொழில்நுட்பத் தகுதியுடைய ஒரு புதிய தலைமுறைப் பணியாளர்களை இந்தியாவிலேயே உருவாக்கி, சர்வதேச நிறுவனங்களில் அவர்களுக்கு உயரிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிசிஎஸ் மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து நிதிச் சேவைகள், பொது மக்கள் சேவைகள், சுகாதாரம், லைஃப் சயின்சஸ், விமானப் போக்குவரத்து, டெலிகாம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பம் (Medtech) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஏஐ தீர்வுகளைப் பெருமளவில் அறிமுகப்படுத்தவுள்ளன.