September 10, 2026

மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து கணவர் தற்கொலை: 

கள்ளத் தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ரா பகுதியைச் சேர்ந்தவர் தீபங்கர் சர்க்கார் (39). இவரது மனைவி மோனிகா சர்க்கார் (31). இவர்கள் இருவரும் நதுன்கிராம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

காலை இவர்களது வீட்டுக்கு வந்த வேலைக்காரி, மோனிகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டு அலறினார். தகவலறிந்து வந்த போலீசார், மோனிகா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். அப்போது இவர்களது 7 வயது மகள், தனது தாயின் சடலத்தின் அருகிலேயே உறங்கிக் கொண்டிருந்தது காண்போரை நெஞ்சை உருகச் செய்தது. போலீசார் அந்த 7 வயது சிறுமியை அவளது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான தீபங்கர் சர்க்கார் பெல்காச்சியா மெட்ரோ ரயில் நிலையம் சென்றார். அங்கு வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் புளூ லைன் வழித்தடத்தில் சுமார் 50 நிமிடங்கள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீராம்பூர் போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘இந்தக் கொலையில் மூன்றாவது நபருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தீபங்கருக்கு வேறொரு திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். ஆனால், தனது மனைவிக்குத் கள்ளத் தொடர்பு இருப்பதாக தீபங்கர் சந்தேகித்ததே இந்தக் கொலை மற்றும் தற்கொலை முடிவுக்குக் காரணம் என மோனிகாவின் உறவினர்கள் தெரிவித்தனர். இருந்தும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

You may have missed