தனியார் மயமாக்குவதை கண்டித்து திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என உள்ளாட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஏஐடியுசி சங்கத்தின் பொதுச் செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு உள்ளாட்சிகளில் தூய்மை பணி உள்ளிட்ட இதர பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். ஏற்கனவே இருந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே ஒப்பந்த முறையில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.