April 21, 2026

ஓட்டுக்கு பணம் தரவில்லை…. சாலை மறியல் செய்த பொள்ளாச்சி மக்கள்!

வரும் 23-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் பல்வேறு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு, ஆறாவது வார்டு பகுதியைச் சேர்ந்த ஒரு சில வாக்காளர்களுக்கு திமுகவினர் 2000 ரூபாய் கொடுத்ததாகவும், ஒரு சில நபர்களுக்கு பணம் எதுவும் தரவில்லை எனக் கூறியும் அவ்வழியாக வந்த திமுக பிரச்சார வாகனத்தை வழிமறித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ஒவ்வொரு அரசியல் கட்சியினரிடமும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை, ரோடு சரியில்லை, அடிப்படை வசதி எதுவும் செய்து தரவில்லை எனக் கூறி தான் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் இவர்கள் வித்தியாசமாக ஓட்டுக்கு பணம் தரவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டது ஜனநாயகம் எதை நோக்கி செல்கிறது என்று கேள்விக்குறியாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஓட்டுக்கு பணம் தரவில்லை எனக் கூறி பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.