திருப்பூர்: 18ல் திருமணம், 19ல் கர்ப்பிணி மனைவி கொலை…

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி, கருமாரம்பாளையம், மூகாம்பிகை நகரில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதன்பேரில் நேரில் வந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் பெண் ஒருவரின் சடலமும், ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டது.

இந்த இரண்டு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்து விஷனை நடத்தினர். அப்போது, உயிரிழந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 27), அவரின் மனைவி ஸ்ரீமதி (வயது 19) என்பது தெரியவந்தது. இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப்பின் திருப்பூர் கருமாரப்பாளையம் பகுதியில் வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். வெல்டிங் ஓர்க்-ஷாப்பில் சரவணகுமார் வேலை பார்த்து வந்த நிலையில், பி.எஸ்.சி., நர்சிங் படித்த ஸ்ரீமதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். பொருளாதார பிரச்சனை காரணமாக மனைவியை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தவே, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும், மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. 3 நாட்களுக்கு முன்னதாகவே இருவருக்கும் தகராறு உண்டாகவே, ஆத்திரமடைந்த கணவர் மனைவியை பூரிக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். பின் மதியம் வெளியே நடமாடியவர், தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது அம்பலமானது. சரவணகுமார் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து சித்ரவதை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 3 மாத கர்ப்பிணியாக ஸ்ரீமதி இருந்த நிலையில், தினமும் சித்ரவதையை அனுபவித்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.