திருப்பூர்: அழகிகள் நிர்வாண ஆட்டம்: தவெக நிர்வாகி பாருக்கு சீல்…

திருப்பூரில் ரோட்டரி சார்பில் பாசறை என்ற நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 27,28 ஆகிய 2 நாட்கள் திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஏவிபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதில் கவிஞர் வைரமுத்து, நடிகை நமிதா, பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்ட ரோட்டரி நிர்வாகிகளுக்கு அருகில் இருந்த தவெக நிர்வாகி நீதிராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் பார்ட்டி அரங்கில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு 28ம் தேதி இரவு முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் மது விருந்து, அழகிகளின் அரை நிர்வாண நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து அழகிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குத்தாட்டம் போட்டனர். இத்தகவலறிந்த போலீசார் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சென்று அரை நிர்வாண ஆடைகளோடு குத்தாட்டம் போட்ட அழகிகளை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக பல்வேறு பார்களை நடத்தி வருபவரும், தனியார் பார்ட்டி அரங்கு உரிமையாளரான தவெகவை சேர்ந்த நீதிராஜன் (49) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரியின் பரிந்துரைப்படி அவரது தனியார் பாருக்கு கலால்துறை அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.