பைனான்சியர் கத்தியால் குத்தி எரித்து கொடூரக்கொலை:

கோவை ஆர்.எஸ். புரம், பட்டுநூல்கார சந்து பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் பாஷா (27). இவர், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இரவு 8 மணியளவில் வீட்டிற்கு அருகே நின்று போனில் பேசி கொண்டு இருந்தார். இதை அவரது தாய் பாத்திமா பார்த்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் உள்ளே வரவில்லை. பதற்றமடைந்த குடும்பத்தினர், அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான அபுதாகிர் பாஷாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அதிகாலை சிரியன் சர்ச் ரோடு பகுதியில் உள்ள சாக்கடையில் ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அது மாயமான அபுதாஹிர் பாஷா என்பது தெரிவந்தது. அவரது வயிற்றில் கத்திக்குத்து காயமும் இருந்தது. எனவே அவரை கத்தியால் குத்தி கொலை செய்து, எரித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாயம் என பதிவு செய்திருந்த வழக்கை போலீசார், கொலை வழக்காக மாற்றி அபுதாஹிர் பாஷாவை கொலை செய்தது யார்? பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.