May 10, 2026

முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளரான லட்சுமி பிரியா!

முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் அவரது முதன்மைச் செயலாளராக (தனிச் செயலாளர்- 1) பி.செந்தில் குமாரையும் தனிச் செயலாளர்-2 வாக லட்சுமி பிரியாவையும் தமிழக அரசு நியமித்துள்ளது. எந்த அரசு வந்தாலும் அவர்களுக்கு தேவையான அதிகாரிகளை நியமித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் உமாநாத் ஐஏஎஸ்ஸுக்கு பதிலாக செந்தில் குமார் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைமைச் செயலாளராக டாக்டர் பி. செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.

ஏற்கெனவே இந்தத் துறையின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றியவர் இவர். அது போல் லட்சுமி பிரியா ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினத் துறையின் செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது விஜய்க்கு தனிச் செயலாளராகியுள்ள இவர் தமிழக முதல்வர் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் , ஆதிதிராவிடர் மற்றும் மற்ற சமூகங்களை சேர்ந்த அடிதட்டு மக்களின் மேம்பாட்டிற்காக அரசின் திட்டங்களை விரைவுப்படுத்துவதற்காகவும் அமர்த்தப்பட்டுள்ளார்.

1978 டிசம்பர் 10 அன்று பிறந்த லட்சுமி பிரியா, தமிழ்நாடு கேடரின் 2006 ஆம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பி.இ. பட்டமும், எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளார். தற்போது, இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். தனது பணியின் போது பல்வேறு கண்காட்சிகளை நடத்தியுள்ளார். TN Beat Expo 2025 என்ற கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. அதில் பேசிய லட்சுமி பிரியா, இந்த கண்காட்சியானது ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த தொழில் முனைவோருக்கு ஒரு தலமாக அமைந்துள்ளது. இங்கு 1500 க்கும் மேற்பட்டோர் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

தொழில்முனைவோரின் தேவை குறித்து அறிய சில கருத்தரங்கள் நடந்தன என்றார். இவ்வாறு ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் லட்சுமிபிரியா. தனது பணிக்காலத்தில், இவர் ஆணையர், மாவட்ட ஆட்சியர், இணை ஆணையர், ஆட்சியர் மற்றும் இணைச் செயலாளர், திட்ட இயக்குநர், மற்றும் துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் புலமை பெற்றவர் மற்றும் தொடர்ந்து இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றி வருகிறார். 28 வயதில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற லட்சுமி பிரியா, 48 வயதில் முதல்வரின் தனிச் செயலாளர் பணிக்கு உயர்ந்துள்ளார். இவரது பதவிக்காலம் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து ஓராண்டு ஆகும்.