April 22, 2026

சட்டப்பேரவைத் தேர்தல்: கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் ஆகியவற்றுக்கான படகு போக்குவரத்து நாளை (ஏப்ரல் 23) ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஏதுவாகப் பல்வேறு கட்டுப்பாடுகளும் விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவாலயம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகுச் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. படகுத் துறை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் தேர்தலில் வாக்களிக்க வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.