சென்னை: தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆர்கே நகர் மதிமுக பகுதி செயலாளர், கள்ளக்காதலி மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 கிலோ கஞ்சா, 2 டூவிலர்கள், 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேதாஜி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது அரைகிலோ கஞ்சா சிக்கியது. இதையடுத்து, போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 6வது தெருவைச் சேர்ந்த விஷ்ணுபிரியன்(20) என்பதும், இவரது தந்தை பாபா ஜெகன்(52) மதிமுக ஆர்கே நகர் பகுதி செயலாளர் என தெரியவந்தது. இவருக்கும் சாத்தாங்காடு அண்ணாமலை நகர் 4வது தெருவைச் சேர்ந்த கீதா(37) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளதும் தெரியவந்தது. மேலும், கீதா பாபா ஜெகன் உதவியுடன் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, எண்ணூர் உட்பட வட சென்னை பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.
இதனிடையே, விஷ்னுபிரியன் அளித்த தகவலின்பேரில், ஆர்கே நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மதிமுக பகுதி செயலாளர் பாபா ஜெகன் மற்றும் இவரது கள்ளக்காதலி கீதா ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், கீதாவின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் 4.5 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், எடை இயந்திரம், கடத்தலுக்கு பயன்படுத்திய டூவிலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேர் மீதும் வழக்கு பதிந்து ராயப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த மதிமுக ஆர்கே நகர் பகுதி செயலாளர், மகன் மற்றும் கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கஞ்சா விற்பனை செய்ததாக மதிமுக செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலியின் மகன் நெல்லையில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் முதல்வர் விஜய், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை வைகோ சந்தித்தபோது, மின்னல் முகமது அலியையும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். கஞ்சா வழக்கில் சிக்கியவரின் தந்தையை அழைத்துச் சென்று, முதல்வரை வைகோ சந்திக்க வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மின்னல் முகமது அலியின் பதவியை பறித்து வைகோ உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளில் சேர மின்னல் முகமது அலி முயன்றுள்ளார். ஆனால் மகன் மீது கஞ்சா வழக்கு இருப்பதால் அவரை கட்சியில் சேர்க்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்து விட்டார்.
இந்நிலையில், காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் ஒரு அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த மின்னல் முகமது அலியின் மகன் கஞ்சா எனும் போதைப் பொருளை பயன்படுத்துவதை அவர் அறியவில்லை. அவன் கைதான பின்பு தான், அவர் உண்மையை தெரிந்து கொண்டார். மகனை கடுமையாக கண்டித்தார். இனி இந்த கொடிய பழக்கதிற்கு ஆளாக மாட்டேன் என்று அவரது மகன் உறுதி அளித்து, தற்போது கேரள மாநிலத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மின்னல் முகமது அலி எந்த தவறும் செய்யவில்ல. இதனால், மின்னல் முகமது அலி தொடர்ந்து மதிமுகவின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More Stories
8 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு: சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை டிஜிபி பாராட்டு
திருவாரூர் அருகே குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்…
கோவையில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பலாத்காரம்: