மாணவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் நண்பர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப்கேட்டுக்கொண்டார்.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முதன்மை நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார்.
விழாவில் ஆட்சித்தலைவர் பேசுகையில், “புவி வெப்பமயமாதலைத் தடுத்திடும் வகையிலும், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழ்நாடு அரசு ‘பசுமைத் தமிழ்நாடு’ திட்டத்தினைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. பசுமைச் சூழல் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், அந்தச் சூழலைத் தக்கவைக்கவும் மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் பசுமைச் சூழலை அதிகப்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ‘பசுமைப் படையை’ மேலும் வலுப்படுத்த, வாரம் ஒருமுறை 15 நிமிடங்கள் மாணவர்களுக்குப் புவி வெப்பமயமாதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் உத்தரவிடப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே மாணவர்களுக்குச் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதன் மூலம், எதிர்கால வளர்ச்சிப் பணிகளில் அவர்கள் பசுமையைக் கருத்தாகக் கொண்டு செயல்படுவார்கள். மாணவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ர.மோனிகா, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அஜிதா, எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிஷோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்

More Stories
பாஜக பெண் நிர்வாகி புகார்.. திருச்சி சூர்யா கைது.. முக்தாருக்கு வலைவீச்சு!
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை…
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு…