May 4, 2026

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! விஜய் வீட்டுக்கு பூங்கொத்துடன் வந்த ஜோதிடர்

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு அவரது ஆஸ்தான ஜோதிடரும், தவெக செய்தித் தொடர்பாளருமான ராதன் பண்டிட் பூங்கொத்துடன் வந்தார். காலை முதலே விஜய் வீட்டு வாசலில் ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. இதற்கு முன்னதாகவே விஜய்யின் நீலாங்கரை வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள்.

அப்போது அங்கு சிவப்பு நிற காரில் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் வருகை தந்தார். அவர் கையில் ஒரு பூங்கொத்து இருந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வென்று விஜய் முதல்வராவார் என கூறி வரும் நிலையில் அவர் பூங்கொத்துடன் விஜய் வீட்டிற்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 17-ஆவது சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த முறையை காட்டிலும் அதிகம். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது.