வங்கிகளை மொத்தமாக முடக்கும் திறன் கொண்ட AI..?

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான Anthropic உருவாக்கியுள்ள மிகவும் சக்திவாய்ந்த புதிய AI மாடல்களான Claude Fable 5 மற்றும் Mythos 5 ஆகியவற்றை வெளிநாட்டவர்களுக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு திடீரென தடை விதித்துள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு அமெரிக்க வர்த்தகத் துறை இந்த உத்தரவை வழங்கியதாக ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது

இந்த உத்தரவின் காரணமாக, அமெரிக்காவில் வசிப்பவர்களாக இருந்தாலும், அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்களாக இருந்தாலும், அமெரிக்க குடியுரிமை இல்லாத எவரும் இந்த புதிய AI மாடல்களை அணுக முடியாத வகையில் Anthropic நிறுவனம் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கான Fable 5 மற்றும் Mythos 5 சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில்தான் Anthropic நிறுவனம் Claude Fable 5 என்ற புதிய AI மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் “Mythos Class” எனப்படும் மிகவும் மேம்பட்ட AI திறன்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சிக்கலான கணினி அமைப்புகளை ஆய்வு செய்வது, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கட்டமைப்புகளில் உள்ள பலவீனங்களை கண்டறிவது போன்ற திறன்கள் இதில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பழைய மற்றும் சிக்கலான மென்பொருள் அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை இந்த AI வேகமாக கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த அதிநவீன ஏஐ மாடல் தவறான நபர்களின் கைகளில் சென்றால், பெரிய அளவிலான சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் பல பில்லியன் டாலர்களும், முதலீடுகளும வீணாகும் என்ற அச்சம் உள்ளது.

இதேவேளையில் அமெரிக்கர்கள் கையில் இருக்கும் காரணத்தால் தவறான அமெரிக்கர்கள் மற்ற நாடுகளின் நிதியியல் தளத்தை சிதைக்கமாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், இந்தத் தடைக்கு பின்னால் உள்ள தேசிய பாதுகாப்பு காரணங்கள் என்ன என்பது குறித்து அமெரிக்க அரசு விரிவான விளக்கம் அளிக்கவில்லை. மேலும், இது ஒரு தவறான புரிதலால் ஏற்பட்ட முடிவு என்று Anthropic நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையை அமெரிக்க அரசுடன் பேசி விரைவில் தீர்த்து வைத்து, சேவையை மீண்டும் தொடங்க முயற்சித்து வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் தற்போதைக்கு, உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டு பயனர்கள் Claude Fable 5 மற்றும் Mythos 5 ஆகிய AI மாடல்களை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் Anthropic நிறுவனத்தின் மற்ற Claude AI மாடல்கள் வழக்கம்போல தொடர்ந்து செயல்படும் என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.