மயிலாடுதுறை : பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு..

புத்தூர் ஆனந்தகூத்தன் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி – அரசி தம்பதியரின் மகள்களை பள்ளி வேனில் ஏற்றிவிடுவதற்காக தாய் வந்திருந்தார். அவசரத்தில் ஒன்றரை வயது மகிழ்வேலனை தரையில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் குழந்தை வேனின் பின்பகுதிக்குச் சென்றதை கவனிக்காத ஓட்டுநர் பிரகாஷ் வாகனத்தை இயக்கியதால், பின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து வேன் ஓட்டுநர் பிரகாஷை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அதேவேளையில், பள்ளி வாகனத்தில் தேவையான உதவியாளர் இல்லாமல் இயக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், பள்ளி வாகனம் தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி பள்ளி தாளாளரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் சீர்காழி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக தெரிவித்ததால், அங்கு சில நேரம் பதற்றமான சூழல் நிலவியது.