17 வயது சிறுவன் கொடூர கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முருகேசன் – மகேஸ்வரி. இவர்களின் 17 வயது மகன் அன்புச்செல்வன். இவர் ஐடிஐ முடித்துவிட்டு ஓசூரில் பணியாற்றி வந்தார். கடந்த 2024ம் ஆண்டு பெருமநாடு கிராமத்தில் அன்புச்செல்வனின் தாய் மாமாவான முருகானந்தம் என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த உறவினரான சத்யராஜ் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பேவர் பிளாக் கல் பதிப்பதில் சம்பளத்தை பிரிப்பதில் சண்டை வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அன்புச்செல்வன் தனது மாமா முருகானந்தத்திற்கு ஆதரவாக சென்று சத்யராஜை தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த சத்யராஜ் மருத்துவமனையில் ஒரு வாரத்துக்குப் பின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டதும் அன்புச்செல்வன் மற்றும் அவரது மாமா முருகானந்தம் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து அன்புச்செல்வன் உள்ளூரில் இருந்தால் பிரச்சினை ஏற்படும் எனக் கருதிய பெற்றோர், அவரை ஓசூருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கொலை வழக்கின் விசாரணைக்காக ஓசூரில் இருந்து பத்து நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். வியாழக்கிழமை இரவில் அன்புச்செல்வனின் பைக்கை அவரது நண்பர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் நண்பர்களை பைக்கை திருப்பி கொடுக்காமல் இருந்தனர். இதனால், அன்புச்செல்வன் தனது நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.

உடனே அவர்கள் பெருமாநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே வந்து பைக்கை எடுத்துச் செல்லுமாறு நண்பர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டு பெருமாநாடு டாஸ்மாக் அருகே தமிழ்ச்செல்வன் சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அதைக் கண்டு தமிழ்ச்செல்வன் சுதாரிப்பதற்குள் மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை, கழுத்து உட்பட உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டதில் அவர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும் சிறுவன் அன்புச்செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருக்கிறதா?. ஏற்கனவே அன்புச்செல்வன் கொலை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் சிலரையும் பிடித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்த 17 சிறுவனை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தால் அன்னவாசல் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.