மத்திய பிரதேசத்தில் விபத்தில் சிக்கியவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை கழுவச் சொன்ன வீடியோ ஆதாரத்தால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டம் கரேலா கிராமத்தைச் சேர்ந்த ராகுல் பர்மன் (32), என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் கட்னி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அவரை ஜபல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதற்காக ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், படுகாயமடைந்த அந்த நோயாளியை அழைத்துச் செல்வதற்கு முன்பாக, அவரது பெண் உறவினரை ஆம்புலன்ஸை கழுவி சுத்தம் செய்ய ஊழியர்கள் வற்புறுத்திய வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர் ஒருவர் அருகில் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் ஆம்புலன்ஸைக் கழுவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வப் புகார் ஏதும் வரவில்லை என்றாலும், வீடியோவின் அடிப்படையில் அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் ஊழியர்கள் பணம் கேட்டார்களா அல்லது வண்டியைச் சுத்தம் செய்தால்தான் நோயாளியை ஏற்றிச் செல்ல முடியும் என நிபந்தனை விதித்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More Stories
சொத்து பிரச்சனைக்காக மனைவியை, நண்பர்களுடன் காரில் கடத்திய கணவர்…
வீடுகள் – விவசாயம் உள்ளிட்ட இலவச மின்சாரத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி மானியம்….
2 வயது பெண் குழந்தை கடத்தல்.. தவெக பிரமுகர் கைது: