கோயில் கருவறைக்குள் தனது படத்தை வைத்து பூஜை செய்வதை தவிர்க்குமாறு தவெகவினருக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக அறிவுறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 22-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழாவை அவரது கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடினர். இந்து முன்னணி சார்பிலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம்.
தவெக கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின்போது, அவரது கட்சியினர் பல கோயில்களின் கருவறைக்குள் ஜோசப் விஜய் படத்தை வைத்து வழிபட்டுள்ளனர். இது அங்கு வருகை தந்த பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பழனி தண்டாயுதபாணி கோயிலில் தவெக மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா தலைமையில் நடைபெற்ற தங்கத்தேர் நிகழ்வில் தங்கத்தேரில் விஜய் படத்தை வைத்துள்ளனர். இதற்கு முருக பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பலபட்டரை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற முதல்வரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், அந்தக் கோயிலில் பூஜை செய்கின்ற பூசாரியை மிரட்டி அம்மன் கருவறைக்குள் அம்மனுக்கு இணையாக விஜய் படத்தை வைத்து வழிபட்டு இருக்கின்றனர். இது அங்கு வழிபட வருகை தந்த பக்தர்களுக்கும் அதை சமூக வலைதளங்கள் மூலமாக கண்டவர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் விநாயகர் கோயில் மற்றும் அம்மன் கோயில் கருவறைகளில் ஜோசப் விஜய் படத்தை வைத்து கட்சியினர் வழிபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இந்து சமுதாய மக்கள் வழிபடுகின்ற தெய்வத்துக்கு இணையாக முதல்வர் ஜோசப் விஜய்யின் படத்தை வைத்து வழிபட்ட தவெகவினரின் செயல் தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியும், மிகுந்த மன வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே, தமிழகத்தில் பெரும்பான்மை இந்து சமுதாய மக்கள் வழிபடுகின்ற தெய்வத்துக்கு இணை கற்பித்து கருவறைக்குள் படத்தை வைத்து பூஜை செய்வதை தவிர்க்குமாறு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக தனது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.

More Stories
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன்’ திரைப்படத்தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமனம்: தலைமைச் செயலர் அரசாணை வெளியீடு
போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் | மக்களுடன் ஓடிய முதல்வர் விஜய்!
கோவையில் விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பிய டூவிலர்களின் சைலன்ஸர்கள் பறிமுதல்!