April 28, 2026

தபால்நிலையத்தில் சேமிப்பு கணக்கில் முறைகேடு: பொறுப்பு அதிகாரி சஸ்பெண்ட்..

சேலம் கிழக்கு தபால் கோட்டத்திற்கு உட்பட்ட பெரியகவுண்டாபுரம் தபால்நிலையத்தில், பொதுமக்களின் சேமிப்பு கணக்குகளில் முறையாக பணத்தை வரவு வைக்காமல், முறைகேடு நடப்பதாக கோட்ட அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து கிழக்கு கோட்ட உதவி கண்காணிப்பாளர் மஞ்சு விசாரணை நடத்தினார். மேலும் அவர், பெரியகவுண்டாபுரம் தபால் நிலையத்திற்கு சென்று ஆர்.டி. சேமிப்பு கணக்குகளை ஆய்வு செய்தார்.

அதில், மாதேஸ்வரி என்ற பெண் கடந்த 29 மாதங்களாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் செலுத்திய நிலையில் மொத்தம் ரூ.1.45 லட்சம் வரவு வைக்கப்படாமல், முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை தபால்நிலைய பொறுப்பு அதிகாரியான ராஜ்குமார் (47) என்பவர் கையாடல் செய்து, சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து ராஜ்குமாரிடம் விளக்கம் கேட்டனர். பின்னர், அவரிடம் இருந்து முறைகேடு செய்யப்பட்ட ரூ.1.45 லட்சத்தை திரும்ப வசூலித்தனர். தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அதிகாரி ராஜ்குமார் மீது காரிப்பட்டி போலீசில் உதவி கண்காணிப்பாளர் மஞ்சு புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் போலீசார் பொறுப்பு அதிகாரி ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.