கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய், ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செப்.27-ம் தேதி கரூர் மாவட்ட வேலுச்சாமி புரத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்களைக் கண்காணித்து தமிழக காவல்துறை 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இப்படி வழக்குத் தாக்கல் செய்வதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில், “பழியைத் துடைக்க வழக்குப்பதியும் பாசிச திமுக அரசு. கரூர் கூட்ட நெரிசல் குறித்து வதந்தி பரப்பியதாகக் கூறி 25 சமூக வலைதளக் கணக்காளர்கள் மீது திமுகவின் ஏவல்துறை வழக்குப் பதிந்து 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளபோது சகோதரத்துவத்துடன் தோள் கொடுப்பதைவிட்டு சர்வாதிகாரத்தைக் கையில் எடுப்பது தான் திராவிட மாடலா?
அசாதாரண நிலையின்போது அதற்குக் காரணமானவர்களை நேர்மையான விசாரணை மூலம் கண்டுபிடிப்பதைவிட்டு, மக்களைத் திசைதிருப்புவதற்கு, உயிர் பிழைத்தோரைக் கைது செய்வது நியாயமா? இப்படி அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடிமறைக்க? யாரைக் காப்பாற்ற? தன்னால் நிகழ்ந்த தவறைத் திரையிட்டு மறைக்க தன்னைக் கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்க்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம். சிபிஐ விசாரணை கோரி, இறப்புக்கான நீதியைப் பெற்றுத் தருவது மட்டுமே பலியான 41 அப்பாவி மக்களுக்கு ஒரு பொறுப்பான அரசு செலுத்தும் உண்மையான அஞ்சலி. இதனை (அறிவாலயம்) அரசு உணர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


