
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியைக் காப்பறியது பாஜக அல்ல, 122 எம்எல்ஏக்கள் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினா. அப்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக. ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என்று கூறினார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் இன்று வினா எழுப்பினர்.
அதற்கு அவர்,அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது 122 சட்டமன்ற உறுப்பினர்கள் தானே தவிர பாஜக. அல்ல. சசிகலா கூறியதால் தான் அந்த 122 சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். ஆனால், இதையெல்லாம் மறைத்து எடப்பாடி பழனிசாமி அப்பட்டமாக பொய் பேசுகிறார். அவரது பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது. நன்றிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் பொய்மூட்டை பழனிசாமி. துரோகம் செய்வதைத் தவிர வேறு எதுவுமே தெரியாதவர்.
அதிகாரத்தில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராக முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக்கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி. துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை அன்று காப்பாற்றிய 18 எம்.எல்.ஏக்களை பின்னர் தகுதி நீக்கம் செய்தவரே அவர்தான். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என இதுவரை அமித்ஷா குறிப்பிடவில்லை. நீங்கள் விரும்புபவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அமித்ஷா எங்களிடம் கூறியிருந்தார். டெல்லிக்குச் சென்று 6 கார்கள் மாறி மாறி திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவிற்கு தற்போது உள்ள 20 சதவீத வாக்குகளும் வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறையத்தான் போகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி தோற்பதற்கு நாங்கள் காரணமில்லை. அவர்தான் காரணம். தன்மானம் தான் முக்கியம் என பேசிவரும் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றது ஏன்? எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தாக்கிப்பேசினால் அவரால் தாங்க முடியாது என்றார் டி.டி.வி.தினகரன்.