
புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தியை ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி சென்னை காவல்துறை தலைவர் அலுவலகம் அருகே ஏர்போர்ட் மூர்த்தி மீது சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது ஏர்போர்ட் மூர்த்தியும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டார். இது தொடர்பாக இரு தரப்பினரும் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை ஓராண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.