விளாத்திகுளம் அருகே பெண்ணை குத்திக்கொன்று 10 பவுன் கொள்ளை…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டா வடமலாபுரத்தை சேர்ந்தவர் திருக்கண்ணன். இவரது மனைவி கலாவதி (62). புதூர் யூனியன் அலுவலகத்தில் சத்துணவு மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ராகேஷ், சதீஷ்குமார் என 2 மகன்களும் சுலோச்சனா என்ற மகளும் உள்ளனர். மூவரும் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனர். தம்பதியர் மிட்டா வடமலாபுரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர்.

நேற்று இரவு திருக்கண்ணன், வீட்டின் வாசலில் படுத்து தூங்கியுள்ளார். கலாவதி வீட்டின் உள்பகுதியில் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். இந்நிலையில், அதிகாலை திருக்கண்ணன் எழுந்து தண்ணீர் மோட்டார் போடுவதற்காக மனைவியை எழுப்பியுள்ளார். அப்போது அவர், கழுத்தில் கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

புகாரின்படி காடல்குடி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கழுத்தில் ஸ்குரூ டிரைவர் போன்ற கூர்மையான ஆயுதம் மூலம் குத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. கலாவதி அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. இதுதொடர்பாக காடல்குடி போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.