சொத்து தகராறில் தம்பியின் கார் தீ வைத்து எரிப்பு…

 சேரன்மகாதேவி அருகே கங்கானங்குளத்தில் சொத்து பிரச்னையில் தம்பியின் காரை தீ வைத்து எரித்த அண்ணணை போலீசார் கைது செய்தனர்.சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம் பட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (35). வாடகைக்கு கார் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அவரது அண்ணன் பாபநாச பெருமாள் (38) என்பவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு இதுதொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாபநாசபெருமாள் இரவு 10 மணியளவில் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து முத்துகுமார் கார் நிறுத்தி வைத்திருக்கும் பகுதியான கங்கனாங்குளம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அவரது காரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் முத்துகுமாரின் கார் முற்றிலும் சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி போலீசார் அப்பகுதியில் பதுங்கியிருந்த பாபநாசபெருமாளை அதிரடியாக கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். பாபநாசபெருமாள் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வைலத்தளங்களில் வைரலாகி வருகிறது.