மனித உருவ ரோபோக்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஏஐ நிறுவனங்கள், நிஜ வாழ்க்கை தரவுகளை சேகரிப்பதில் தீவிரமாக உள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த 25 வயதான இல்லத்தரசி நாகிரெட்டி ஸ்ரீரம்யாசந்திரா தனது அன்றாட வீட்டு வேலைகளை வீடியோவாக பதிவு செய்து நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறார். இந்தப் பணியின் மூலம் அவர் கூடுதல் வருமானமும் ஈட்டி வருவது கவனம் பெற்றுள்ளது.
ஸ்ரீரம்யாசந்திரா தனது தலையில் ஸ்மார்ட்போனை பொருத்திக்கொண்டு, காலை காபி தயாரிப்பது, காய்கறி நறுக்குவது, துணிகளை மடிப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை முதல் நபர் பார்வையில் பதிவு செய்கிறார். இவ்வாறு உருவாக்கப்படும் வீடியோக்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன
மனிதர்கள் பொருட்களை எவ்வாறு கையாளுகிறார்கள், தினசரி பணிகளை எப்படி செய்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்வதற்காக இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் அடிப்படையில், எதிர்கால மனித உருவ ரோபோக்கள் துல்லியமாக செயல்படவும், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கவும் உதவும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
எக்ஸ் தளத்தில் வெளியான தகவலின்படி, அவர் தினமும் 90-க்கும் மேற்பட்ட குறும்பட வீடியோக்களை பதிவு செய்கிறார். இந்தப் பகுதிநேர பணியின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.250 வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர், “வீட்டு வேலை செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் வேறு யார் தருவார்கள்?” என மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை குறைக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கே பொதுமக்கள் தரவுகளை வழங்குவது சரியா என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர்.
மற்றொரு தரப்பினர், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நிஜ உலகத் தரவுகள் அவசியம் என்றும், இதுபோன்ற பணிகள் சாதாரண மக்களுக்கு புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், மனித உருவ ரோபோக்களின் பயன்பாடு, அவற்றின் வளர்ச்சி வேகம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்த விவாதங்களும் இணையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

More Stories
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்
‘நலம் TN’ இணையதளத்தை தொடங்கிய முதல்வர் விஜய்! நீங்களும் நன்கொடை தரலாம்…