கணவனை வைத்து கள்ளக்காதலன் கொலை.. பேரலில் அடைத்து வாய்க்காலில் வீசிய பெண்..

மகாராஷ்டிரா மாநிலம் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் மக்சூத் அலிகான் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து காணாமல் போனார். பல இடங்களில் தேடி பார்த்தும் அர்பாஸை காணாததால் அவரது தந்தை, மும்ப்ரா காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் கானின் செல்போன் எண் சிக்னலை ட்ராக் செய்தனர்.

அதில் கான் கடைசியாக மும்பையின் வெர்சோவா பகுதியில் இருந்ததாக காட்டியது. உடனே விசாரணையை தீவிரப்படுத்த, கானுடன் கடைசியாக செல்போனில் பேசிய மெஹ்ஜபீன் என்ற பெண்ணை, சந்தேகத்தின் பெயரில் காவல்நிலையம் அழைத்து விசாரித்தனர். ஆரம்பத்தில், அவர் புலனாய்வு அதிகாரிகளைத் திசை திருப்பும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மழுப்பலான பதில்களை அளித்து தப்பிக்க முயன்றார். ஆனால், தொடர் விசாரணையின்போது, ​​அவர் அளித்த சில வாக்குமூலங்கள் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தின. தனது கணவர் ஹசன் மற்றும் சகோதரர் தாரிக் ஷேக் ஆகியோருடன் இணைந்து, அர்பாஸிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டு, பின்னர் அவரைக் கொலை செய்ததாக மெஹ்ஜபீன் ஒப்புக்கொண்டார்.

பண விவகாரம் தொடர்பாகப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து, அந்த மூவரும் கானை வெர்சோவா பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு வைத்து, கான் பணம் கொடுக்க மறுத்தபோது, வெறிபிடித்த கும்பல், பிளாஸ்டிக் குழாய்களால் சரமாரியாகத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கானைக் கொலை செய்த பிறகு, அந்த மூவரும் அவரது சடலத்தை ஒரு பச்சை நிறப் பேரலுக்குள் திணித்து தடயங்களை அழிக்கும் முயற்சியாக, அந்தப் பேரலை ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாய்க்காலில் வீசி விட்டு, தப்பித்துள்ளனர்.