ஆடுகளை திருடி காதலிக்கு விலை உயர்ந்த பரிசு: வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்: 

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. இவரது மகன் தங்கராஜ். இவர்கள் 10 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு மர்ம நபர்கள் 2பேர் பட்டியின் வேலி உடைத்து, நைசாக நுழைந்து 10 ஆடுகளையும் ஓட்டிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நாய்கள் குரைத்ததால் மணி எழுந்துவெளியே வந்து வார்த்தபோது ஆடுகளை திருடிச்செல்ல முயன்றதை கண்டு கூச்சல் போட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் விரட்டிப்பிடித்தனர். அப்போது பிடிபட்ட வாலிபர், ‘நான் தவெக நிர்வாகி, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என கூறி மிரட்டி உள்ளார். ஆனால் பொதுமக்கள் நீ யாராக இருந்தால் என்ன என்று கூறி அவர்களுக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து ஓமலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பிடிபட்டவர்களை மீட்டு விசாரணை நடத்தியதில், செங்கானூரைச் சேர்ந்த ஏழுமலை மகன் தனுஷ் (21), மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. தனது காதலிக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்காக ஆடுகளை திருட முயன்றதாக தனுஷ் கூறினார்.