May 10, 2026

தவறை அனுமதிக்கமாட்டேன்னு பகிரங்கமாக சொன்ன விஜய்! நல்ல அறிகுறினு பாராட்டிய சகாயம் ஐஏஎஸ்!

தமிழகத்தின் முதல்வராக விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆட்சி அமைக்க உரிமைக் கோரி கிட்டத்தட்ட 4 முறை ஆளுநரை பார்த்த நிலையில் விஜய்க்கு 120 பெரும்பான்மை பலம் இருப்பதை அடுத்து நேற்று விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

இதையடுத்து சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதல்வராக இன்று பதவியேற்றார். இந்த விழாவில் ராகுல் காந்தி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், விசிக எம்எல்ஏ வன்னியரசு, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: நான் தவறுகளை அனுமதிக்க மாட்டேன் என்று விஜய் இன்றைய தினம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இது ஒரு நல்ல அறிகுறி. இந்த பகிரங்க அறிவிப்பு, தமிழக மக்களிடத்தில் நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அது உருவாக்கியிருக்கிறது என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், இந்த அரசுக்கு உங்களை போன்ற ஐஏஎஸ் அதிகாரியின் அறிவுரை என்ன என கேட்டதற்கு சகாயம் , “நான் மிகச் சிறியவன். எனது 30 ஆண்டுகள் பணியில் உறுதியான நேர்மையான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். நான் தொடர்ந்து என்னை உருவாக்கிய தமிழ்ச் சமூகத்திற்காக எனது பங்களிப்பை செய்வேன்” என்றார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் நீங்கள் போட்டியிட வாய்ப்பா என கேட்டதற்கு, அது உங்களை போன்ற ஊடகத்தினருடைய கற்பனை! என்றார். மேலும் சகாயம் தொடர்கையில், 2010 ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்த கனிமவளக் கொள்ளையை இந்தியாவின் மிகப் பெரிய கிரானைட் ஊழலை நான் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நமது அமைப்பு ஊழல் மிகுந்த மோசமான அமைப்பாக இருக்கிறது என சொன்னால் இன்று வரை சிறு துளி கூட நகரவில்லை. நான் இந்த தமிழ்ச் சமூக பணிக்கு எனது பங்களிப்பை தொடர்ந்து ஆற்றுவேன்.

தமிழக அரசு 10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது என்பது யதார்த்தம். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த கடனுக்கான வட்டியையே பெருந்தொகையாக செலுத்த வேண்டியது உள்ளது என்பதும் யதார்த்தம். இது சவாலான பணி, செலவினங்களை குறைத்து ஊழலை அகற்றி நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணித்தால் ஒரு காலகட்டத்தில் கடனை அகற்றிவிடலாம். கடந்த திமுக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என விஜய் சொன்னதை நான் வரவேற்கிறேன். எவ்வளவு காலத்தில் இதை வெளியிடுவார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

நேர்மையான சகாயம் ஐஏஎஸ்ஸை விஜய் தனது கட்சியில் கொண்டு வர எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டாராம். தற்போது திருச்சி கிழக்கில் சகாயம் ஐஏஎஸ்ஸை போட்டியிட வைக்க விஜய் முயற்சித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. இந்த நேர்மையான அதிகாரியை எம்எல்ஏவாக்கி அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பையும் கொடுக்க வேண்டும் என்ற யோசனையில் விஜய் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் சகாயம் ஐஏஎஸ் சொல்வதை பார்த்தால் அவர் அரசியலுக்கு வரமாட்டார் போல் இருக்கிறது.